Ad Widget

வவுனியா அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு!

தமது ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றைய தினம் வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் இருந்த அரச பேருந்தின் நடத்துனர் மற்றும் ஊழியர்கள் மீது வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்தின் ஊழியர்கள் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தால் அரச பேருந்துத்தரப்பினை சேர்ந்த ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யுமாறு தெரிவித்து போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று காலை முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதேவேளை, தமது கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் வட மாகாண ரீதியாக பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பணிப்புறக்கணிப்பு காரணமாக பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

Related Posts