வலி- வடக்கில் பொலிஸார் மற்றும் முப்படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்!!

யாழ்ப்பாணம் வலி- வடக்கில் பொலிஸார் மற்றும் முப்படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் அத்துடன் விடுவிக்கப்படும் காணிகளில் மக்கள் குடியிறுப்புக்களை நிர்மாணித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென பாதுகாப்பு அமைச்சுசார் குழுக் கூட்டத்தில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் வியாழக்கிழமை (20) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் பாதுகாப்பு அமைச்சுசார் குழு கூட்டம் நடைபெற்றது.

பாதுகாப்பு அமைச்சுசார் குழு கூட்டத்தில் கலந்துக் கொண்ட கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ‘ யாழ் – வலி.வடக்கில் 2009 ஆண்டு பொலிஸார் மற்றும் முப்படையினர் வசம் 23 ஆயிரம் ஏக்கர் காணி காணப்பட்டது. இக்காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வந்தன.

இதன் பிரகாரம் 21 ஆயிரம் ஏக்கர் விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது 2640 ஏக்கர் பொலிஸார் மற்றும் முப்படையினர் வசமுள்ளது. இக்காணிகள் மக்கள் பயன்படுத்தும் வகையில் விடுவிக்கப்பட வேண்டுமென கோரினார்.

அத்துடன் வலி.வடக்கில் அண்மைக்காலத்தில் விடுக்கப்பட்ட காணிகளில் விவசாயம் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு குடியிருப்பு இல்லையென்ற காரணம் சொல்லப்படுகின்றது.எனவே விடுவிக்கப்பட்ட காணிகளில் வீடு கட்டிக் கொள்ள அனுமதிக்க முன் வர வேண்டும்

அத்துடன் பலாலி – வசாவிளான் சந்தி வரையான வீதி மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் முல்லைத்தீவு கேப்பாபிலவு காணி விடுவிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையையும் கடற்தொழில் அமைச்சர் முன்வைத்த நிலையில் கூட்டத்தில் கலந்துக் கொண்ட இராணுவ உயர் அதிகாரிகள் விடுவிக்கப்பட்ட பகுதிகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக குறிப்பிட்டனர்.

Related Posts