வடமாகாண சபை உறுப்பினர்களுக்கான பொலிஸ் பாதுகாப்பு வாபஸ்

வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு, சனிக்கிழமை (28) முதல் மீளப்பெறப்பட்டுள்ளதாக சபையின் உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் விரும்பினால் பொலிஸ் பாதுகாப்பினை பெற்றுக்கொள்ளமுடியும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், திருமதி அனந்தி சசிதரன், விந்தன் கனகரத்தினம் மற்றும் சபையின் எதிர்க்கட்சி தலைவர் தவாசா ஆகியோர் பொலிஸ் பாதுகாப்பு பெற்றிருந்தனர்.

இவர்களுக்கு தலா இரண்டு பொலிஸார் பாதுகாப்பு கடமைக்காக வழங்கபட்டிருந்தனர். இந்நிலையில், இந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரும் அந்தந்த பொலிஸ் நிலையித்தினால் மீளப்பெறப்பட்டு வேறு இடங்களில் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

பா.கஜதீபனுக்கு அவரது பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பகாரியால் எழுத்துமூலம் இவ்விடயம் தெரியப்படுத்தபட்டுள்ளதாகவும் ஏனைய உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வமான அறிவித்தல் இன்றி பொலிஸார் மீளப்பெறப்பட்டுள்ளதாகவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் வினவிய போது, இதே சம்பவம் அண்மையில் கிழக்கு மாகாணத்திலும் இடம்பெற்றுள்ளது. இவ்விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடப்படும் என தெரிவித்தார்.

Related Posts