முப்பது வருடகால போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணத்தை மீளக்கட்டி எழுப்புவதற்கு அரசு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. மாவை சேனாதிராஜா வலியுறுத்தினார்.
போரின்போது அழிக்கப்பட்ட தொழிற்சாலைகளையும், மூடிக்கிடக்கும் தொழிற்சாலைகளையும் மீளச் செயற்பட வைப்பதன் மூலம் இப்பிரதேச மக்களுக்கு பெருமளவிலான தொழில் வாய்ப்புகளை வழங்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரச தொழில்வாய்ப்புகள் தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
வேலை இல்லாப் பிரச்சினை நாட்டின் ஏனைய பகுதிகளைவிட வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேயே உக்கிரமடைந்துள்ளது.
கடந்த முப்பது வருடங்களாக மேற்படி பகுதிகளில் தொழில்களை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
போரின்போது பாரிய தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டன. பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வேலையில்லா திண்டாட்டம் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடக்கு, கிழக்கில் 90 ஆயிரம் இளம் தாய்மார் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விசேட வேலைத்திட்டத்தின் கீழ் இவர்களது தகமைகளுக்கேற்ப தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
எமது பிரதேசத்தில் வேலையில்லாப் பட்டதாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று (நேற்று) இப்பட்டதாரிகள் வட மாகாண சபைக்கு முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்குத் தொழில் வழங்கப்பட வேண்டும்.
இதேவேளை, இன்றைய பல்கலைக்கழக கல்விமுறை பட்டம்பெற்று வெளியேறும் மாணவர்கள் தொழில் வாய்ப்புகளைப் பெறக்கூடியதாக இல்லை. கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்.
உலக நாடுகளில் 23 இற்கும் மேற்பட்ட துறைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு பட்டங்கள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக சிகை அலங்காரம், ஆடை தயாரித்தல் போன்ற துறைகளிலும் கலாநிதிப் பட்டம் வழங்கப்படுகின்றன. இவ்வாறான வாழ்வாதார தொழில் பயிற்சிநெறிகள் இங்கும் உள்வாங்கப்பட வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் முதலீடு செய்யவும் கட்டியெழுப்பவும் வெளிநாட்டவர்களும் புலம்பெயர் உறவுகளும் முன்வந்தபோதும் முன்னைய அரசு அதற்கு இடமளிக்கவில்லை. எனவே, போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட எமது பிரதேசத்தை விசேட வேலைத்திட்டத்தின் கீழ் கட்டியெழுப்பவும், தொழில் வாய்ப்புகளை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்” – என்றார்.