Ad Widget

வல்லிபுர ஆழ்வார் ஆலய தீர்த்தத்தின் போது கடலில் நீராடிக்கொண்டிருந்தவர் உயிரிழப்பு – ஒருவர் மாயம்

வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவில் கடலில் நீராடியவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் காணாமல்போயுள்ளார்.

இவ்வாலயத்தின் வருடாந்த திருவிழாவில் சமுத்திரத் தீர்த்தம் நேற்று செவ்வாய்க்கிழமை (17)மாலை வடமராட்சி, பருத்தித்துறை – கற்கோவளம் கடற்பரப்பில் நடைபெற்ற வேளையிலேயே இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் உயிரிழந்தவர் வடமராட்சி கிழக்கு, அம்பன் – குடத்தனையைச் சேர்ந்த வயது 54 வயதுடைய குடும்பஸ்தர் ஆவார்.

அதேவேளை, சாவகச்சேரி – நுணாவிலைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞரே காணாமல்போயுள்ளார். இவர் பாடசாலையொன்றில் கடமையாற்றும் ஆசிரியர் எனவும் கூறப்படுகிறது.

நேற்று மாலை நடைபெற்ற சமுத்திரத் தீர்த்தத் திருவிழாவைக் காண பல பாகங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

நேற்று மாலை 6 மணியளவில் வல்லிபுர ஆழ்வார் தீர்த்தமாடிய பின்னர், பக்தர்கள் கடலில் இறங்கி நீராடிக்கொண்டிருந்தனர்.

இதன்போது, ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார். அவரை மீட்ட அங்கிருந்த மக்கள் கடற்கரையை அண்டிய பரப்பு மணல் நிறைந்தது என்பதால் சுமார் 1.5 கிலோமீற்றர் தூரம் அவரை டிரக்டரில் கொண்டு சென்று, பின்னர் அம்புலன்ஸ் மூலமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர். அவ்வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அதன் பின்னர், இரவு சுமார் 8.30 மணியளவில் கடலில் நீராடிக்கொண்டிருந்தவர்களில் ஒருவரைக் காணவில்லை என்று தெரியவந்தது.

இதையடுத்து நேற்றிரவு கடற்படையினர் மற்றும் அப்பகுதி மீனவர்களின் உதவியுடன் காணாமல்போனவரைத் தேடும் பணி தொடர்ந்தது.

எனினும், நீண்ட நேரத் தேடுதலின் பின்னரும் அவர் மீட்கப்படவில்லை.

இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Posts