யாழில் வீடொன்றில் தங்கியிருந்த பெண்களுடன் தொடர்பில் இருந்த ஆண்கள் குறித்து விசாரணை!

யாழ்ப்பாணதத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வீடொன்றில் தங்கியிருந்த பெண்களுடன் தொடர்பில் இருந்த ஆண்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.நாவலர் வீதியில் உள்ள வீடொன்று, அதன் உரிமையாளரால் பிறிதொரு நபருக்கு வாடகைக்கு வழங்கப்பட்டது. வாடகைக்குப் பெற்றவர் அதனை தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிடமாக வாடகைக்கு வழங்கி வந்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பரில் குறித்த வீட்டில் பெண்கள் சிலர் தங்கியிருந்த நிலையில் ஆண்கள் பலர் அந்த வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்கள். அதனால் அயலவர்கள் குறித்த வீட்டில் விபச்சார நடவடிக்கைகள் நடைபெறுகின்றன என சந்தேகம்கொண்டு அது தொடர்பாக அப்பகுதி கிராம சேவையாளருக்கு அறிவித்தனர்.

அது தொடர்பாக, கிராம சேவையாளர் விடுதி நடத்துனரிடம் விசாரணைகளை முன்னேடுத்த போது, தாம் அவ்வாறு செயற்படுவதில்லை எனத் தெரிவித்துள்ளார். அதன்போது கிராம சேவையாளர் இனி இவ்வாறான முறைப்பாடு கிடைக்கப்பெற்றால் அதுதொடர்பாக பொலிஸாருக்கு அறிவித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சிலகாலம் அந்த விடுதியில் அவ்வாறான சம்பவங்கள் நடைபெறாத நிலையில் சில வாரங்களில் சந்தேகத்திற்கு இடமான ஆண், பெண் நடமாட்டம் அந்த வீட்டில் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலான காலப்பகுதி தொடக்கம் குறித்த வீடு யாருமற்ற நிலையில் பூட்டி இருந்துள்ளது. அந்நிலையில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் மின் விளக்கு ஒளிர்ந்ததைத் தொடர்ந்து அந்த வீட்டில் ஆள் நடமாட்டம் இருந்தமையால், அயலவர்கள் அந்த வீட்டிற்கு சென்றபோது, விடுதி நடத்துனரும் இரு பெண்களும் வீட்டில் இருந்துள்ளனர். அங்கிருந்த பெண்களை அயலவர்கள் விசாரித்த போது, தாம் பருத்தித்துறையைச் சேர்ந்தவர்கள் எனக் கூறியுள்ளனர்.

அதனால், அயலவர்கள் பெரிதும் சந்தேகமடையாமல், அன்றைய தினம் அது தொடர்பாக கவனத்தில் எடுக்காமல் விட்டிருந்தனர். மறுநாளான நேற்று சனிக்கிழமை அந்த வீட்டில் வேறு ஆண்களின் நடமாட்டமும் இருந்துள்ளது. அத்துடன் கார் ஒன்றும் வீட்டிற்கு வந்துசென்றுள்ளது. அதனால் அயலவர்கள் சந்தேகமடைந்து நேற்றைய தினம் யாழ்ப்பாண பொலிஸாருக்கும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் அறிவித்தனர்.

அறிவித்தலின் பிரகாரம் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டினை முற்றுகையிட்டபோது அங்கு இரு பெண்களும் விடுதி நடத்துனருமான ஆணும் இருந்துள்ளனர். பெண்களிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, தொடர்ந்து முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்கினார்கள்.

பின்னர் விசாரணைகளின் போது, ஒருவர் பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் மற்றைய பெண் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர்கள் இருவரும் முல்லைத்தீவில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் போது நட்பு ஏற்பட்டதாகவும் பொலிஸ் விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டது.

அதேவேளை, ஒரு பெண் தான் விவாகரத்துப் பெற்றவர் எனவும் மற்றைய பெண் தனது காதலன் கொழும்பில் உள்ளதால் அவருக்காக இந்த விடுதியில் தங்கியிருப்பதாகவும் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து குறித்த விடுதியில் இருந்த இரு பெண்களையும் விடுதி நடத்துனரான ஆணையும் அந்த விடுதியில் தனிமைப்படுத்த பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த விடுதிக்கு இன்றைய தினம் காலை சென்ற யாழ்.பிரதேச செயலர் ச.சுதர்சன், வீட்டின் உரிமையாளரை அழைத்து வீட்டினை விடுதி நடத்துவதற்கு வழங்கிய ஒப்பந்தத்தை உடனே இரத்து செய்யுமாறும், இனிவரும் காலங்களிலும் விடுதி நடத்தும் நோக்குடன் வீட்டினை எவருக்கும் வழங்கக் கூடாது எனவும் கடுமையாக எச்சரித்து அறிவுறுத்தல் வழங்கினார்.

Related Posts