யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்த இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரி, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் ஆகியோர் இணைந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான கலந்துரையாடலில் ஈடுப்பட்டதோடு, கள விஜயத்திலும் ஈடுப்பட்டுள்ளனர்.
மண்டைத்தீவு பகுதியில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட காணி தொடர்பாகவும் அதனுடைய தற்போதைய நிலைமை தொடர்பாகவும் நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, இதற்கான திட்ட முன்மொழிவு பொறிமுறை ஒன்றினை உருவாக்குவது தொடர்பாகவும் இதன்போது பேசப்பட்டது.
வடக்கு பிராந்தியத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கான ஆரம்ப திட்டங்கள் குறித்து விவாதித்தனர்.
இந்த முயற்சியினால் வடக்கு மாகாணத்தில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கப்பெருவதோடு, கிரிக்கெட் உட்கட்டமைப்பு மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரிய அவர்கள் மைதானத்தின் கட்டுமானத்திற்காக நிதி உதவி வழங்குமாறு கடந்த வாரம் வருகை தந்த இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.