மாணவனின் கையில் கற்பூரத்தைக் கொளுத்திய ஆசிரியைக்கு இடமாற்றம்

மாணவனின் கையில் கற்பூரத்தைக் கொளுத்திய ஆசிரியைக்கு, இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக, ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

மாணவி ஒருவரின் பணத்தைத் திருடிய சந்தேகத்தில், ஆசிரியை ஒருவர், மாணவர்கள் அறுவரின் கைகளில் கற்பூரத்தைக் கொழுத்தியச் சம்பவமொன்று, பொகவந்தலாவ பிரதேச தமிழ்ப் பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.

பொகவந்தலாவை ரொப்கில் தமிழ் வித்தியாலயத்திலேயே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்காரணமாக, மாணவரொருவரின் வலது கையில் எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி பாடசாலையில் தரம் 3இல் கல்விப் பயின்று வரும் மாணவர்களே, இவ்வாறு பாதிப்படைந்துள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து, மாணவர்களின் கையில் கற்பூரம் கொளுத்திய ஆசிரியையை இடமாற்றக் கோரி, பொகவந்தலாவ ரொப்கில் தோட்ட மக்கள், நேற்று முன்தினம் காலை ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில், பொகவந்தலாவை பொலிஸார் மற்றும் ஹட்டன் வலயக் கல்வி பணிமனையின் அதிகாரிகள், விசாரணைகளை மேற்கொண்டனர். விசாரணைகளின் பின்னரே, மேற்படி ஆசிரியைக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

மாணவனின் கையில் கற்பூரம் கொழுத்திய ஆசிரியை

Related Posts