மஹிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினாலும், பிரதமர் பதவியை வழங்க ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஆற்றிய விஷேட உரையின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் மஹிந்த ராஜபக்ஷவுடன் எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை எனக் கூறிய ஜனாதிபதி, ஜனவரி 8ம் திகதி வழங்கிய வாக்குறுதிகளை அதன்படியே நிறைவேற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் ஊடகங்களால் காட்டிக் கொடுத்தவன், துரோகி என விமர்சிக்கப்பட்டேன், முன்னர் இருந்த ஜனாதிபதிக்கு இவ்வாறு கூறியிருந்தால் என்ன நடந்திருக்கும் என அறிந்திருப்பீர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் நாட்டுக்கு பெற்றுக் கொடுத்த ஜனநாயகத்தை தவறான வழியில் பயன்படுத்த வேண்டாம் எனவும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள எடுத்த தீர்மானம் பிழையானது என சிலர் குற்றம்சாட்டினர். ஆனால் அது சரியானதே என ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.
மஹிந்த தலைவர் பதவியை ஏற்றிருந்தால் 100 நாள் திட்டத்திற்கு ஆதரவளித்திருக்க மாட்டார் எனவும் நாட்டு மக்களுக்கு நல்லாட்சி கிடைத்திருக்காது எனவும் அவர் கூறினார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு கட்சி வேட்புமனு வழங்கப்பட்டதில் தனக்கு உடன்பாடில்லை என இங்கு குறிப்பிட்ட ஜனாதிபதி எதுஎவ்வாறு இருப்பினும் மஹிந்த தோல்வியைத் தழுவுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
தான் இம்முறை தேர்தலில் பக்கச் சார்பின்றி நடுநிலை வகிக்கப் போவதாகவும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை எனவும் மைத்திரிபால சிறிசேன தனது உரையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.