புலிகளால் பாதுகாக்கப்பட்ட வடக்கு கடல்வளம் இன்று இராணுவத்தின் காவலுடன் அழிப்பு!

“விடுதலைப்புலிகளின் காலம்வரை பாதுகாப்பாக இருந்த வடபகுதி கடல் வளம் இன்று அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது” என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன், இதை இராணுவம் பார்த்துக்கொண்டிருக்கப்போகின்றதா என்றும் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“முத்துக்குளிக்கும் பூமி என்றும், இரத்தினக்கல் உதிக்கும் பூமி என்றும், அமைதிப் பூங்கா என்றும், ஒட்டுமொத்தத்தில் அழகிய தீவு என்றும் இலங்கை வர்ணிக்கப்பட்டது. ஆனால், இன்று அனைத்தும் அழிக்கப்பட்ட அபாய பூமியாக நாடு மாறிக்கொண்டிருக்கின்றது.

அந்தவகையில் வடக்கில் கடல் வளம் அழிக்கப்படுகின்றது. சட்டவிரோதமாக அட்டை பிடிக்கும் நடவடிக்கை நடைபெறுகின்றது. கடந்தகால இரத்த வரலாற்று அரசு செய்ததைத்தான் இன்று நல்லாட்சி என்ற போர்வையில் மைத்திரி அரசும் அமைதியாகச் செய்துவருகின்றது.

வடக்கில் சாலை கடற்கரையில் அட்டைப்பிடிப்பு தொழில் சட்ட விரோதமான நடைமுறைகளைப் பின்பற்றி முன்னெடுக்கபடுகின்றது. அட்டைப்பிடிப்புத் தொழில் பகலில் செய்யப்படவேண்டும். ஒளியூட்டபடக்கூடாது. அடிமட்டத்திலுள்ள சங்குகள் அள்ளப்படக்கூடாது. இப்படி பல விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால், இரவில் ஒளியூட்டி அளவு வேறுபாடின்றி அட்டைகளை அள்ளிக்கொண்டிருக்கின்றனர். சங்குகளை சாக்கு சாக்குகளாகக் கொண்டுவந்து வியாபாரம் செய்கின்றனர். இவற்றுக்கு ஆதராங்கள் உள்ளன. நானும் நேரில் கண்டுள்ளேன்.

ஆயிரக்கணக்கான வள்ளங்களில் ஆயிரக்கணக்கான வேற்று மாவட்டத்தவர்கள் அமைச்சர்களின் ஆதரவுடன் சாலை, மாத்தளன், கொக்கனை போன்ற பிரதேசங்களில் சட்டவிரோதமாக அட்டை பிடிக்கும் நடடிவக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வருடமும் ஈடுபட்டிருந்தார்கள். இவ்வருடமும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் மீன்வளம் அழிக்கப்பட்டு மக்கள் வறுமையைத் தொட்டுக்கொண்டிருக்கின்றனர்.

சட்டத்துக்கு உட்பட்ட வகையில் அட்டை பிடிப்பு இடம்பெற்றால் அதை நாம் எதிர்க்கப்போவதில்லை. ஆனால், ஒருசில அமைச்சர்களின் அடிவருடிகள் இராணுவத்தின் காவலுடன் சட்டவிரோதமாக அட்டை பிடித்து வருகின்றனர். சட்டவிரோத செயற்பாட்டுக்கு இராணுவம் காவல் காப்பதா?

அதேவேளை, இந்திய ரோலர்கள் அள்ளு வலைகளைப் பயன்படுத்தி, தடைசெய்யப்பட்ட முறைகளைக் கையாண்டு முல்லைத்தீவுக் கடலில் இறால் பிடிக்கும் தொழிலைத் தொடங்கியுள்ளனர். இதனால் எமது மக்கள் பரிதவித்துப் போயுள்ளனர். இவ்வாறு பல நூற்றுக்கணக்கான ரோலர்கள் முல்லைத்தீவுக் கடற்பரப்பை அலங்கோலப்படுத்திக்கொண்டிருக்கின்றன.

பரந்த கடலில் அனைத்தையும் அழித்து முடிக்கின்றனர். விடுதலைப் புலிகளின் காலம்வரை பாதுகாப்பாக இருந்த வடபகுதி கடல் வளம் இன்று அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதை இராணுவம் பார்த்துக்கொண்டிருக்கப்போகின்றதா? சட்டவிரோத நடவடிக்கைகள் உடன் தடுத்து நிறுத்தப்படவேண்டும். அதற்கேற்ற வகையில் அரச பாதுகாப்புப் படையினர் கரையோர பாதுகாப்பைப் பலப்படுத்தவேண்டும்.

எமது மீன்வளம் அழிக்கப்படுவதைத் தடுக்காது இந்த அரசு அமைதி காக்குமானால், முல்லைத்தீவு மண்ணிலும், மன்னார் தீவிழும் எமது அஹிம்சைப் போராட்டங்கள் வெடிக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

உண்ணாவிரதப் போராட்டங்கள் தானாக உதிக்கும். உயிர்ப்பலிகள் மீண்டும் இந்த நல்லாட்சி அரசுக்குச் சமர்ப்பணம் செய்யப்படும். நல்லாட்சி என்ற உங்கள் பெயர் ஏமாற்று அரசாகக் கூடாது. இந்திய ரோலர் படகுகளைத் தடுத்துநிறுத்துங்கள். வெளிமாவட்ட மீனவர்களின் ஊடுருவலையும் தடுத்துநிறுத்துங்கள்” – என்றார்.

Related Posts