தமிழில் ‘சத்ரியன்’, ‘பிரம்மா’, ‘நினைவிருக்கும் வரை’, ‘ஏழையின் சிரிப்பில்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் கே.சுபாஷ். இவர் இன்று சென்னை எஸ்.ஆர்.மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 57.

‘கலியுகம்’ படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான கே.சுபாஷ், ஆரம்ப காலத்தில் அஜித்தை வைத்து ‘பவித்ரா’, ‘நேசம்’ என இரு படங்களை இயக்கியுள்ளார். தமிழில் கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட ‘சுயம்வரம்’ படத்திலும் ஒரு இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
இதுமட்டுமில்லாமல், இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘தில்வாலே’, ‘ஹவுஸ்புல்’ உள்ளிட்ட படங்களுக்கு எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் தமிழில் கடைசியாக இயக்கிய படம் ‘123’. இப்படத்தில் நடன இயக்குனர்களான பிரபுதேவா, ராஜு சுந்தரம், நாகேந்திர பிரசாத் மூவரும் இணைந்து நடித்திருந்தனர். ஜோதிகா கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சுபாஷின் மரணம் தமிழ் திரையுலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.