Ad Widget

பறிக்கப்பட்ட அதிகாரங்களை திருப்பி வழங்க ஜனாதிபதி ரணில் இணக்கம்!

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் பறிக்கப்பட்ட அதிகாரங்களைத் திருப்பித்தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்திருக்கும் நிலையில், அவ்வாறு வழங்கப்படும் அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாதவாறு அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் எனவும், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்னதாக அதற்குரிய உத்தரவாதத்தை வழங்கவேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (14) காலை 11.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசித்துள்ள விடயங்களை உள்ளடக்கி அண்மையில் சுமந்திரனிடம் கையளித்த ஆவணத்தை ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் வழங்கியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதேவேளை அந்த ஆவணத்தில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உருவாக்கப்படவேண்டிய சட்டங்கள், நீக்கப்படவேண்டிய சட்டங்கள் குறித்து இருவரும் விரிவாகக் கலந்துரையாடினர். அதேபோன்று அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் பறிக்கப்பட்ட அதிகாரங்களைத் திருப்பித்தருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்திருக்கும் நிலையில், அவ்வாறு வழங்கப்படும் அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாதவாறு அரசியலமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் எனவும், எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்னதாக அதற்குரிய உத்தரவாதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கவேண்டும் எனவும் இதன்போது சுமந்திரன் வலியுறுத்தினார்.

அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, அதனை செனெட் சபை மூலமாகச் செய்வதாக அல்லவா ஏற்கனவே கலந்துரையாடினோம் என வினவினார். அதனை ஆமோதித்த சுமந்திரன், புதிய அரசியலமைப்பு தொடர்பில் முன்னர் கலந்துரையாடிய வேளையில், மேற்குறிப்பிட்டவாறு வழங்கிய அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாமல் பாதுகாப்பதற்கு செனெட் சபையை நிறுவுவது குறித்துத் தாம் பேசியதாகவும், இருப்பினும் அதுகுறித்து பகிரங்கமாகத் தெரியக்கூடியவகையில் ஜனாதிபதி உத்தரவாதத்தை வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் தேசிய கொள்கைகள் முழு நாட்டுக்கும் பொதுவானவையாக இருப்பினும், அதன்கீழ் உரிய கட்டமைப்புக்களை நிர்வகிப்பதற்கான அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவேண்டும் எனவும், விசேட சட்டங்களுக்கான தேவைப்பாடுகள் உள்ளபோதிலும், அவை தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படாதவண்ணம் அவற்றை மாற்றியமைக்கவேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் சுமந்திரன் வலியுறுத்தினார்.

அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, இதுபற்றியும் சுமந்திரனுடன் விரிவாகக் கலந்துரையாடினார்.

Related Posts