Ad Widget

நான் ஒருபோதும் தமிழரசு கட்சியை விட்டு வெளியேறமாட்டேன்!

நான் கட்சியை விட்டு வெளியேறிவிடுவேன் என சிலர் கூறுகிறார்கள். நான் ஒருபோதும் தமிழரசு கட்சியை விட்டு வெளியேறமாட்டேன். என்னை கட்சியை விட்டு வெளியேற்றுவதற்கு பலர் முயற்சி செய்கிறார்கள். ஆனால் நான் கடைசி வரை போராடுவேன்.

இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக விழா நேற்று (13) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களுக்கு இணைந்த வடகிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை அடிநாதமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு கட்சியே இலங்கை தமிழரசு கட்சி. அதனுடைய கொள்கை பிறழாது, அதனுடைய தாகம் தீராது, அதனுடைய அடிப்படை மாறாது எங்களுடைய கட்சி இப்போதும் நிலையான பயணத்தை செய்து வருகின்றது.

தற்போது நாட்டிலேயே மாற்றம் பற்றி அதிகம் பேசப்பட்டு வருகின்றது. தென்னிலங்கையில் ஏற்பட்ட மாற்றமானது, ஒரு மாயையாக இருக்கலாம். அல்லது நீண்ட பயணத்தினுடைய ஒரு தொடக்கமாக கூட இருக்கலாம். ஆனால், அது நல்ல நல்லதாக இருந்தால் நாங்களும் அவர்களோடு கைகோர்க்க தயாராக உள்ளோம் என்பதை தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்.

சிங்கள தலைவர்கள் இதயசுத்தியோடு தமிழர்களுக்கான அரசியல் தீர்வை தருவார்களா என நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.

கட்சியினுடைய பாரம்பரியம் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை மீண்டும் ஒரு புதுப்பொலிவை பெற்று பயணம் செய்து வருகிறது.

நாம் குறைந்தபட்சம் 15 பாராளுமன்ற ஆசனங்களை எடுக்க வேண்டும். அவ்வாறு பெற்றால் எங்களுக்கான மாற்றத்தை தரும் களமாக அது மாறும். அதிலிருந்து நாம் பின் வாங்கினால், எங்களுடைய மக்கள் சரியான முடிவுகளை எடுக்க தவறினால் நாங்கள் தோற்றுப் போன இடமாக மாறிக்கொண்டே போவோம்.

பலர் நான் கட்சியை விட்டு வெளியேறிவிடுவேன் என சிலர் கூறுகிறார்கள். நான் ஒருபோதும் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறமாட்டேன். என்னை கட்சியை விட்டு வெளியேற்றுவதற்கு பலர் முயற்சி செய்கிறார்கள். ஆனால் நான் கடைசி வரை போராடுவேன். பகிரங்கமாக சொல்கின்றேன் ஒரே ஒரு அரசியல் கட்சி , அது இலங்கை தமிழரசுக் கட்சியே.

நான் தலைமைப் பதவியில் வெற்றி பெற்றபோதும் வழக்கினை எதிர்கொண்டு வருகிறேன். எனது கட்சிக்காரர்களே நான் தலைவராக செயற்படக்கூடாது என வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்கள். அத்தனை சவால்களையும் தாண்டி இந்த கட்சியில் இருக்கிறேன்.

ஒரு கட்சியாக ஒருங்கிணைய வேண்டும் அலைபாயக்கூடாது. நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றபோதுதான் வரலாற்றின் வெற்றிகள் எங்களைத் தேடிவரும். இயற்கையும், வரலாறும் ஒரு காலமும் தவறுவிடாது.

அண்மை காலங்களிலே என் மீதான சேறுபூசல்கள் மிகப்பெரிய அளவிலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மதுபானசாலைக்கான சிபாரிசு கடிதத்தினை சிறீதரன் எம்.பி வழங்கியதாக பலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

என் மீதான தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸ் நிலையத்திலே முறைப்பாடு செய்துள்ளேன். வழக்கினை தொடர்ச்சியாகவும் நடத்தவுள்ளேன். நான் இந்த விடயத்தினை விடப்போவதில்லை.

நான் மதுபான சாலைக்கான சிபாரிசு கடிதத்தினை வழங்கியிருந்தால் அதனை வெளிப்படுத்தவும் அதனை வெளிப்படுத்தாமல் வெறுமனே யூகங்கள் அடிப்படையில் எழுதுவதை தவிருங்கள் உண்மைகளை எழுதுங்கள்.

அரசியலில் உள்ளவர்கள் மீது துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்த காலத்தில் அரசியலுக்குள் வந்தவன் நான். என்னுடைய அரசியல் பயணம் என்பது வெறும் பஞ்சு மெத்தைக்குள் வந்ததல்ல. நான் கல்லிலும் முள்ளிலும் நடந்து வந்தவன்.

நான் மதுபான சிபாரிசு கடிதத்தினை கொடுத்தவனும் அல்ல. இனிமேல் கொடுக்கப் போறவனும் அல்ல. என்னுடைய இனத்திற்கு விரோதமான, என்னுடைய கட்சிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டேன் என்பதை இங்கு பகிரங்கமாக சொல்ல விரும்புகின்றேன்.

என்னுடைய கட்சியை சேர்ந்தவர்களே என்னை பற்றி தவறாக எழுதுகிறார்கள். சிலர் சொல்லுவதை கேட்டு மோசமாக எழுதினார்கள். அவை எல்லாவற்றையும் கடந்து வந்து பொறுமையோடும் நிதானத்தோடும் என்னுடைய அரசியலை மேற்கொண்டு வருகிறேன், எனத் தெரிவித்தார்.

Related Posts