நாடளாவிய ரீதியில் ஞாயிற்றுக்கிழமை (9) முற்பகல் 11.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் மின் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். திடீர் மின் தடையால் பெரும்பாலான பகுதிகளில் நீர் விநியோகமும் தடைபட்டதோடு, வீதி சமிஞ்ஞைகளும் செயலிழந்தன.
கொழும்பிலுள்ள தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாகவே இந்த மின் விநியோகத் தடை ஏற்பட்டதாக ஆரம்பத்தில் இலங்கை மின்சாரசபை அறிவித்தது. எவ்வாறிருப்பினும் பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் குரங்குகள் மோதியதால் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக மின்சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் மின் விநியோகத்தில் பெரும் தடங்கலை ஏற்படுத்தியதாகவும், இதனால் நாடு முழுவதும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு பின்னர் இந்த நிலைமையை ‘பாணந்துறை துணை மின்நிலையத்தில் அவசரநிலை’ என்று அறிவித்த போதிலும், அமைச்சரின் கூற்றை உறுதிப்படுத்தவில்லை.
நிலைமையை சரி செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விரைவில் மின் விநியோகத்தை மீண்டும் வழங்க குழுக்கள் துரிதமாக செயற்பட்டு வருவதாகவும் அமைச்சினால் அறிவிக்கப்பட்டது. அதற்கமைய சுமார் இரண்டரை மணித்தியாலங்களின் பின்னர் சில முக்கிய இடங்களில் மாத்திரம் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது.
அதற்கமைய பிற்பகல் 2.30 மணியளவில் கொழும்பு தேசிய மருத்துவமனை, அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையம், பியகம மற்றும் சபுகஸ்கந்த உள்ளிட்ட பல முக்கியமான இடங்களில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது. அதனையடுத்து சுமார் மாலை 3 – 4 மணிக்கிடையில் நாடு முழுவதும் மின் விநியோகம் வழங்கப்பட்டது.
இதேவேளை சூரிய மின் உற்பத்தி களங்களை உபயோகப்படுத்துவர்களிடம் மின்சக்தி அமைச்சரால் விசேட கோரிக்கையொன்றும் நேற்றைய தினம் முன்வைக்கப்பட்டது. ‘மின் விநியோகம் வழமைக்கு திரும்பும் வரை சூரிய மின் உற்பத்தி களங்களை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.’ என அமைச்சர் கேட்டுக் கொண்டார். அத்தோடு புகையிரத கடவைகளுக்கருகிலிருக்கும் சமிஞ்ஞைகளும் செயழிலகக் கூடும் என்பதால் அவதானத்துடன் செயற்படுமாறு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பாணந்துரை மின் நிலையத்துக்குள் குரங்குகள் நுழைந்ததால் இவ்வாறு நாடளாவிய ரீதியில் மின் விநியோகத்தடை ஏற்பட்டதாக மின் சக்தி அமைச்சு தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் விமர்சனத்தை முன்வைத்திருந்தார். ‘சம்பவத்தை விட ஊடகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அறிக்கையை முதலில் வெளியிடுங்கள். அடுத்து என்ன நடந்தது என்பதைக் கண்டறியவும். பின் அமைதியாக அறிக்கையை மாற்றுங்கள்.’ என எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.