நகரசபை உறுப்பினர் உள்பட நால்வர் கொடிகாமம் பொலிஸாரினால் கைது!

கொடிகாமம் பொலிஸ் நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட வரணிப் பகுதியில் ஊரடங்கு நேரத்தில் நடமாடிய குற்றச்சாட்டில் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஒருவர் உள்பட நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த வாகனமும் பொலீசாரினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வரணிப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வசதி குறைந்த குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்க முற்பட்ட சமயமே இவர்கள் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஒருவரும், அவர் சார்ந்த கட்சியின் ஆதரவாளர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

கைது செய்யப்பட்ட வேளையில், சாவகச்சேரிப் பகுதியில் உணவுப் பொருள்களை விநியோகிப்பதற்காக சாவகச்சேரி பொலிஸாரினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரம் அவர்களிடம் இருந்த போதிலும், கொடிகாமம் பொலிஸ் பிரிவினுள் ஊரடங்கு வேளையில் நடமாடுவதற்கான அனுமதிப்பத்திரம் எதனையும் அவர்கள் வைத்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நால்வரும், அவர்கள் பயணம் செய்த வாகனமும் இந்தச் செய்தி எழுதப்படும் வரை கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், ஊரடங்கு வேளையில் நடமாடுவோருக்குப் பொலிஸ் பிணை மறுக்கப்பட்ட நிலையில், நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவார்கள் என அறியவருகிறது.

Related Posts