யாழ். துன்னாலைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு காரணமான குழுவின் தலைவரை இன்று (15) அதிகாலை இரண்டு மணியளவில் கைது செய்துள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துன்னாலைப் பகுதியை அண்மித்த முள்ளிக் காட்டுப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தற்போது இடம்பெற்று வரும் குழப்ப நிலைக்கு காரணமான குழுவின் தலைவர் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
அண்மையில், மணல் கடத்தல் சம்பவத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதுடன் பொலிஸ் காவலரண் அடித்து நொருக்கப்பட்டது. மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக வீதிகளில் டயர்கள் கொழுத்தப்பட்டன.
இச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் 78 பேர் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அவர்களில் 40 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் 38 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய 17 பேர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை பொலிஸார் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.