தர்மபுரம் கல்லாறு பகுதியில், கடந்த 11ஆம் திகதி அதிகாலை 60 பவுன் நகை மற்றும் நான்கு இலட்சம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் ஐவரை, தர்மபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் இருந்து, ஒருதொகை நகைகள், ஒருதொகை பணம், மூன்று வாள்கள் மற்றும் கொள்ளை அடித்த பணத்தில் வாங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று மோட்டார் சைக்கில்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட நகைகளில், தர்மபுரம் – கல்லாறு பகுதியில் களவாடப்பட்ட நகைகளில் சிலவும் இம்மாதம் கிளிநொச்சி கனகாம்பிகை குளப்பகுதியில், களவாடப்பட்ட சில நகைகளும் இருப்பதாக, உரிமையாளர்களால் பொலிஸ் நிலையத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களை, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.