தமிழ் தேசிய அரசியலை சரியான தடத்திலே நகர்த்திச் செல்வதற்கு எமக்கு ஒரு வாய்ப்பை வழங்கவேண்டும் – சுகாஷ்

“தமிழ் தேசிய அரசியலை சரியான தடத்திலே நகர்த்திச் செல்வதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தமிழ் மக்கள் ஒரு வாய்ப்பை வழங்கவேண்டும். எனவே தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்துக்கு தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாக்களிக்கவேண்டும்” என்று அந்தக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர், சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் கேட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் தெரிவித்ததாவது;

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் எடுக்கப் போகின்ற முடிவுதான் எமது இனத்தினுடைய எதிர்காலத் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகின்றது. இன்று தாயக்கத்தில் போட்டியிடுகின்ற தமிழ் தேசியக் கட்சிகளிலே தமிழ் தேசியக் கொள்கையைச் சரியான முறையில் முன்கொண்டு செல்கின்ற சரியான தரப்பாக நாங்கள்தான் இருக்கின்றோம்.

ஐ.நா. சபையிலே இலங்கையில் அரங்கேறிய இனப்படுகொலையை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் சபைக்குள் ஈழத்தில் அரங்கேறிய இனப்படுகொலை விவகாரத்தை முடக்காமல், சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இந்த விடயத்தைக் கொண்டு ஈழத் தமிழர்களுக்கு ஓர் தீர்வை எட்டுவதற்குப் போராடுகின்ற ஒரே ஒரு தரப்பாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாங்கள்தான் இருக்கின்றோம்.

அதுமட்டுமல்லாமல் தமிழர்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கின்ற, ஒற்றையாட்சி இடைக்கால வரைபை நிராகரிக்கின்ற ஒரே ஒரு தரப்பாகவும் நாங்கள்தான் இருக்கின்றோம்.

ஆகவே தமிழ் மக்கள் இந்தப் பொதுத் தேர்தலிலே தமது வாக்குகளைச் சிந்தித்து அளிக்கவேண்டும். சிங்களக் கட்சிகளை ஒட்டுமொத்தமாக தமிழ் மக்கள் நிராகரிக்கவேண்டும். அதேபோன்று சுயேட்சைக் குழுக்களையும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கவேண்டும். போலித் தேசியம் பேசும் கட்சிகளையும் தமிழ் மக்கள் நிராகரிக்கவேண்டும்.

தமிழ் மக்கள் ஒன்றுபட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினுடைய சைக்கிள் சின்னத்துக்கு வாக்களித்து, நீங்கள் விரும்புகின்ற பட்சத்தில் இலக்கம் ஒன்றுக்கும் விருப்புவாக்கைச் செலுத்துங்கள் – என்றார்.

Related Posts