தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது எமது கடமை

தேசிய நலன் என்று அரசாங்கம் கொண்டுவரும் தவறான சட்டத் திட்டங்களை எதிர்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை அதிகரிப்பு தொடர்பான பிரேரணை மீது உரையாற்றி அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக சம்பந்தன் தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் விசுவாசமாக இருப்போம் என்றும் வாக்களித்த வடக்கு கிழக்கு மக்களுக்கும் திருகோணமலை மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது எமது கடமை என்று கூறிய எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை அதிகரிப்பு என்ற திட்டம் சிறந்த உதாரணம் அல்ல என்றும் கடந்த காலங்களைப் போன்று அமைச்சரவை கணக்கின்றி அதிகரித்துச் சென்றது போன்ற அரசியல் கலாசாரத்தை ஊக்குவிக்க கூடாதெனவும் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

இந்தியாவில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் நிலையில் அமைச்சரவை 30ற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மொத்தம் 70 என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

இலங்கை தமது அயல்நாடான இந்தியாவை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றில் புதிய இளம் தலைவர்கள் உள்ளதாவும் மாகாண சபையில் முதலமைச்சர் பதவி வகித்தவர்களும் உள்ளதாகவும் அவர்களுக்கு ஏன் பிராந்திய அதிகாரத்தை அதிகரிக்கக் கூடாதெனவும் சம்பந்தன் கேள்வி எழுப்பினார்.

மாகாணங்களுக்கு அதிகாரங்களை அதிகரித்து ஆளுநரை பலப்படுத்தினால் மக்கள் மத்தியில் அபிவிருத்தி முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

Related Posts