தமிழர் வரலாற்றில் 2016 அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக இருக்கும்!

2016 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் அதிமுக்கிய வருடமாக இருக்கும் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்து மாமன்றத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் அவர் தெரிவித்தவை வருமாறு:

மட்டக்களப்பு மாவட்டம் மிக முக்கியமான மாவட்டம். யாழ். மாவட்டத்துக்கு அடுத்ததாக தமிழ் மக்கள் அதிகமாக வாழும் மாவட்டமாகும். வட மாகாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் இடையில் உறவுப்பாலமாக இருப்பது திருகோணமலை மாவட்டமாகும்.

எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு, தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் அதிமுக்கிய வருடமாக இருக்குமென நான் நம்புகின்றேன். இந்த நாட்டில் நீண்டகாலமாக நடைபெறாத பல செயற்பாடுகள் நடைபெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கான நிலைமை தற்போது உருவாகியுள்ளது.

தமிழர்களின் பிரச்சினை இன்று உள்நாட்டு பிரச்சினை மட்டுமல்ல சர்வதேச பிரச்சினையாகும். இது முன்னொரு போதும் இல்லாத அளவு சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு உட்பட பல நாடுகள் செயற்படுகின்றன. உண்மை நிலை உணரப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் வழங்கப்பட வேண்டும் இவ்வாறான சம்பவங்கள் இனி ஒருபோதும் நடைபெறக்கூடாது என்பது தொடர்பில் சர்வதேசம் உறுதியாகவுள்ளது. இவ்வாறான நிலையில் நாங்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். எமக்குள் இருக்கும் பிரச்சினைகளை நாங்கள் பேசித் தீர்த்துக் கொள்ள முயலவேண்டும்.

Related Posts