முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற பின்னர் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
அந்த வகையில் கடந்த 27ஆம் திகதியன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க. வாசுதேவா மற்றும் காணாமல் போனோர் அலுவலக சட்டத்தரணிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சார்பான சட்டத்தரணிகள் ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்
இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க வாசுதேவா முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான 2 அறிக்கைகள் என்னால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
1ஆவது கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் இருந்த உடைகள் தொடர்பான ஆய்வறிக்கையும் 2ஆவதாக கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணியின் போது அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆட்களை இனம் காணக்கூடிய பொருட்கள் சம்பந்தமான அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிச்சயமாக 2ஆவது அறிக்கையில் அகழ்வாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட இலக்கத்தகடுகள் ஆடைகளில் பொறிக்கப்பட்ட இலக்கங்கள் மற்றும் ஏனைய விபரங்கள் அடங்கிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இலக்கத்தகடுகளுக்குரியவர்களின் உறவினர்கள் யாராவது முன்வந்தால் இறந்தவர்களை நாங்கள் இலகுவாக இனங்காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இறுதி அறிக்கை எதிர்வரும் 6 வார காலங்களில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இறுதி அறிக்கையின் போது சட்ட வைத்தியர்களின் பூரண அறிக்கை இறந்தவர்கள் ஏன் இறந்தார்கள்?, என்ன காரணத்தினால் இறந்தார்கள்?, அவர்களின் வயது, உயரம் போன்ற விபரங்கள் அடங்கிய அறிக்கைகள் 6 வார காலத்தில் சமர்ப்பிக்கப்படும். இவ் வழக்கானது அடுத்த தவணைக்காக மார்ச் 27 இற்கு தவணையிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.