குதர்க்கம் பேசியும் மக்களை ஏமாற்றியும் தமது சுயலாப அரசியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்னெடுத்து வருகின்றனர் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் இன்றைய தினம் (07) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்நாட்டின் தேசிய பிரச்சினைக்கு உள்நாட்டிலேயே தீர்வு காணப்பட வேண்டும். இதைவிடுத்து வெளிநாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஒருபோதும் தேவைப்படாது என்பதுடன், வெளிநாடுகளால் எமது பிரச்சினைகளுக்கு உரியவகையில் தீர்வினைப் பெற்றுத்தர முடியாது.
இரண்டாம் உலக யுத்தத்தில் ஜப்பான் மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகள் மீது அமெரிக்க தாக்குதல்களை நடத்தி பெரும் அழிவை ஏற்படுத்தியிருந்த போதிலும் பின்வந்த அரசுகள் அமெரிக்காவுடன் கை குலுக்கியதன் பயனாகவே தற்போது தாக்குதல்களுக்குள்ளான குறித்த இருநாடுகளும் அபிவிருத்தியில் முன்னேற்றம் கண்டுள்ளன.
அதேபோன்றுதான் நாமும் அரசுடன் ஒரு நல்லுறவை பேணும் பட்சத்திலேயே எமது பிரதேசங்களையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்ப முடியுமென்பது மட்டுமல்லாது மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.
அந்தவகையில் கிடைக்கப் பெறுகின்ற சந்தர்ப்பங்களை மக்கள் சரியான முறையில் பயன்படுத்தி முன்னேற்றம் காண வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
இச்சந்திப்பில் மீன்பிடியியல் விஞ்ஞான டிப்ளோமா பட்டதாரிகள் மற்றும் உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா பட்டதாரிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதில் அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குகேந்திரன், யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, அமைச்சரின் இணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.