கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நேற்று (13) திடீரென எக்ஸ்ரே பிரிவில் தீ பரவியபோது, தீயினை கட்டுப்படுத்த வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்புக் கருவிகளை பயன்படுத்தியபோதும் அவை இயங்கவில்லை.
அதனையடுத்து, நெதர்லாந்து அரசின் நிதி உதவியில் வைத்தியசாலைக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விசேட பெண்கள் மருத்துவமனை கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த தீயணைப்புக் கருவிகளை கொண்டுசென்று, பயன்படுத்திய பின்னரே தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் காலாவதியான கருவிகள் இயங்காத காரணத்தால் தீயை அணைக்கும் முயற்சிகள் தாமதமானமை தொடர்பில் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மிக முக்கியமான சேவை வழங்கும் நிறுவனமாக இயங்கிவரும் வைத்தியசாலையில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து தீயணைப்புக் கருவிகளும் காலாவதியாகி பல வருடங்கள் ஆகிவிட்டன.
எனினும், இதுவரை அவை திருத்தப்படவோ மாற்றப்படவோ இல்லை என்றும் இது அதிகாரிகளின் அக்கறையின்மையை வெளிப்படுத்துகிறது எனவும் அருகில் உள்ள புதிய கட்டடத்தில் தீயணைப்புக் கருவிகள் இல்லாமற்போயிருந்தால் வைத்தியசாலையில் பரவிய தீயை அணைக்க வழியின்றி, தீ மேலும் பரவி மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கும் என்றும் பொதுமக்கள் அங்கலாய்க்கின்றனர்.
தீ விபத்தின்போது ஆரம்ப கட்டத்தில் உடனடியாக தீயை அணைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற தீயணைப்புக் கருவிகள் வருடந்தோறும் புதுப்பிக்கப்பட வேண்டும். ஆனால், காலாவதியாகி பல வருடங்களாகிவிட்ட இந்த கருவிகள் கவனிக்கப்படாமலே இருந்துள்ளமை பொறுப்புமிக்க தரப்பினர் சிந்தித்து உடனடியாக செயற்படவேண்டிய விடயமாகும்.