காணாமல்போனவர்கள் தொடர்பில் ஆட்சியாளர்கள் பதில் கூறும்வரையும் உரத்துக் குரல் கொடுப்போம்!

இந்த நாட்டில் காணாமல்போன ஒவ்வொருவருக்கும் என்ன நடந்தது என ஆட்சியாளர்கள் கூறும்வரை நாம் மக்களுக்காக உரத்துக் குரல் கொடுக்கவுள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

‘காணாமல் ஆக்குவதை காணாமல் ஆக்குவோம்’ என்னும் தொனிப்பொருளில் கடந்த புதன்கிழமை அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் இடம்பெற்ற காணாமல்போனோரின் உறவுகளின் கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு உரையாற்றும்போது மேலும் தெரிவிக்கையில் –

“அம்பாறை மாவட்டத்தில் முதலில் இந்த நிகழ்வு ஏற்பாடாகி நடக்கின்றதை இட்டு பெருமையடைகின்றேன். ஒரு சிலவிடயங்களை என்னால் பேசமுடியாது. இந்தப் பிரதேசத்தில் குறிப்பிட்ட ஒரு நபர் குறித்த குற்றச்சாட்டு இருக்கிறது. அந்தக் குற்றவாளிக்கு சாட்சியமளித்த நபருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு அவர் வெளிநாடு சென்றிருந்தார். அது முன்னர் இருந்த அரசின் அகோரம்.

ஆனால், இன்று அது மாறியிருக்கின்றது. குறிப்பிட்ட அந்த நபருக்கு எதிராக பகிரங்கமாக குரல் கொடுக்கின்றீர்கள். இதுதான் நல்லாட்சி. காணாமல்போனவர்கள் குறித்து இந்த அரசு கவனம் செலுத்தியிருக்கின்றது. காணாமல்போனவர்களின் பிரச்சினைகளைப் பார்க்கிலும் முக்கிய ஒரு சில விடயங்கள் இன்னும் மீதமிருக்கின்றன. அதனாலேயே எங்களால் அரசின் பங்காளிகளாக இருக்கமுடியாது.

காணாமல்போனவர்களின் உறவுகளின் ஆதங்கம் எனக்குப் புரிகின்றது. அதற்காக உடனடியாக எதனையும் செய்துவிட முடியாது. அரசு மாறியிருக்கிறது என்று கூறப்படுகின்றது. உண்மையில் அனைத்தும் மாறிவிடவில்லை. ஜனாதிபதியும் அமைச்சர்களுமே மாறியிருக்கிறார்கள். அரச உயர் அதிகாரிகள் மாறவில்லை. இராணுவ அதிகாரிகள் மாறவில்லை.

நான் ஜெனிவா மாநாட்டில் பிரத்தியேகமாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இளவரசர் செயித்தை சந்திக்க சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் அப்போது என்னிடம் பாதுகாப்பு விடயங்கள் மாறவேண்டும் அப்போதுதான் நாட்டில் ஒருசில மாற்றங்கள் நிகழும் அதற்கு காலஅவகாசம் தேவை என்றார்.

எனவே, ஒரு சில விடயங்களை செயற்படுத்த முடியாது. ஆனால், என்னால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதி என்ற வகையில் ஒரு வாக்குறுதியை வழங்கமுடியும். காணாமல்போனவர்கள்களின் பிரச்சினைகள் முடியும் வரை உங்களோடு இருப்பேன் எமது கட்சியும் உடன் இருக்கும்” – என்றார்.

Related Posts