கடந்த காலத்தில் மாயவலை விரித்து ஆடம்பரங்களையும் கட்டற்ற கலாசாரத்தை சீரழிக்கும் விடயங்களையும் பரவவிட்ட மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் திட்டமிட்ட இன அழிப்பின் அறுவடைகளை நாம் இன்று அனுபவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக எமது இளைய சமுதாயத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி பளை தர்மக்கேணியில் திங்கட்கிழமை (08) நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
வடக்கின் வசந்தம் என்றும் வாழ்வின் எழச்சி என்றும் பெயர்களை சூட்டிக்கொண்டு அதன் நிழல்களில் எமது பாரம்பரிய நிலத்தில் நச்சு விதைகளை தூவி எமது இளைய சமுதாயத்தை திசைதிருப்பி, எமக்குள் குரோதங்களையும் பிணக்குகளையும் ஏற்படுத்தி எம்மை நாமே அழித்துக்கொள்ளும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
இந்நிலையை எதிர்பார்த்த சக்திகள் சந்தோசப்படுகின்றன. எமது இளைய சமுதாயத்துக்கு விழிப்புணர்வு தேவைப்படுகின்றது. அதன்மூலம் தொடர்ந்தும் எமது சமூகம் கலாசார சீரழிவுக்குள் தள்ளப்படாதவாறு தடுக்கவேண்டும். கிராமங்களில் இளைஞர்கள், மூத்தவர்கள் ஒன்றிணைந்த செயற்றிட்டங்களை வகுத்து செயற்படுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.