ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் 7 மாதக் கர்ப்பிணி, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும், இன்று (08) அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
ஞானசேகரம் ஹம்சிகா (வயது 25) என்ற கர்ப்பிணி, கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்டார். இவருக்கு நான்கு வயதில் மகனொருவனும் இருக்கிறான்.
கொள்ளையிடும் நோக்கத்தில் இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டிருப்பினும் கொலைக்கான காரணங்கள் இதுவரைக் கண்டறியப்படவில்லை.
எனினும், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், ஆடைகளில் இரத்தக்கறையுடன், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரை மண்டைதீவுப் பகுதியில் வைத்து சந்தேகத்தின் பேரில் அதேதினத்தன்று கைதுசெய்தனர்.
அவ்விருவரும் இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில், மாற்றுதிறனாளியான 12 வயது சிறுவனே முக்கிய சாட்சியாவார். அச்சிறுவன் தங்கியிருக்கும் வீட்டுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தால் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.