ஊர்காவற்றுறையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் அடையாள அணிவகுப்பின் போது, தம்மை அடையாளம் காட்டாதிருக்க, சந்தேகநபர்கள், சாட்சியாளரிடம் பேரம் பேசியமை தொடர்பில், விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊர்காவற்றுறை நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கின் கண்கண்ட சாட்சியமாக உள்ள வாய் பேச முடியாத சிறுவன் தம்மை அடையாளம் காட்டாது விட்டால், அந்த சிறுவனின் குடும்பத்துக்கு 5 இலட்சம் ரூபா பணம் தருவோம் என்று சந்தேகநபர்கள் கூறியதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
சாட்சியாளரான சிறுவனின் உறவினர் ஒருவர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதனையறிந்த சந்தேகநபர்கள் சிறுவனின் உறவுக்காரருடன் பேரம் பேசியுள்ளனர். அவர் அதனை சிறுவனின் தாயாருக்கு தெரியப்படுத்தியுள்ளார் என்று, சட்டத்தரணி மேலும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பேரம் பேசப்பட்ட சிறுவனின் உறவுக்காரிடம் பொலிஸார் வாக்குமூலத்தை பதிவு செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு குறிப்பிட்ட நீதவான், சந்தேகநபர்களான சகோதரர்கள் இருவரையும் எதிர்வரும் 17ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.