கிளிநொச்சி – பூநகரி பிரதேசத்திலுள்ள நன்னீர் பகுதி உட்பட வைத்தியசாலை வளாகம் இராணுவத்தால் தொடர்ந்தும் கையகப்படுத்தப்பட்டுள்ளது’ என வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டில் இடம்பெற்ற போரின் போது மக்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேறியதையடுத்து, அப்பகுதியை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. தற்போது போர் முடிவடைந்து விட்டபோதும் இராணுவத்தை அப்பகுதியிலிருந்து வெளியேற்ற அரசாங்கம் எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.
பூநகரி வைத்தியசாலை தற்போது பிறிதொரு இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களது தேவைக்கு குடிநீரைப் பயன்படுத்துவதற்கு கூட இராணுவம் அனுமதி மறுத்துள்ளது. இது தான் நல்லாட்சியா?’ என்றார். ‘ஒவ்வொரு முறையும் ஆட்சிக்குவரும் அரசாங்கம் ஏதாவதொரு சாட்டுப்போக்கு கூறிக்கொண்டு தமது காலத்தைக் கழிக்கின்றார்களே ஒழிய, மக்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. முழுமையாக இராணுவமயமாகவே பூநகரி மாறியுள்ளது’ எனவும் அவர் தெரிவித்தார்.