அரசாங்கத்தின் கன்னி வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக துணை வைத்திய நிபுணர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிராக இன்று (18) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி இன்று காலை 7 மணி முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தத்திற்கு துணை வைத்திய நிபுணர்களின் கூட்டு சபையைச் சேர்ந்த 7 தொழிற்சங்கங்களும் இடைக்கால வைத்திய சேவைகள் கூட்டு முன்னணியைச் சேர்ந்த 11 தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
நிதியமைச்சின் அதிகாரிகளுடன் தமது பிரச்சினை தொடர்பில் நேற்று (17) இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததன் காரணமாகவே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் இணை அழைப்பாளர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இந்தப் வேலைநிறுத்தம் நியாயமற்றது என இணை சுகாதார நிபுணர்களின் கூட்டு அதிகார சபையின் இணை அழைப்பாளர் சலித் அமரதிவாகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பல கோரிக்கைகளை முன்வைத்து தபால் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் இன்றும் தொடரவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைநிறுத்தம் காரணமாக தபால் நிலையங்களில் 10 இலட்சத்திற்கும் அதிகமான கடிதங்கள் மற்றும் பொதிகள் குவிந்துள்ளதாக அதன் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த வேலைநிறுத்தம் வெற்றியளிக்கவில்லை என இலங்கை தபால் சேவை சங்கத்தின் தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்துள்ளார்.