கிளிநொச்சி, கல்லாறு பகுதியில் ஆயுத முனையில் நாற்பது பவுண் தங்க நகை மற்றும் நான்கு இலட்சம் ரூபாய் பணம் என்பன, கொள்ளையிடப்பட்டுள்ளன
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் தனியார் வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து கொண்டு, நேற்று (11) அதிகாலை உட்புகுந்த, இனந்தெரியாத குழுவொன்று, அங்கிருந்த கடை உரிமையாளர் மற்றும் அங்கு தங்கியிருந்த மற்றுமொருவர் மீதும் சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
அங்கு இருந்த பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை அக்குழு கொள்ளையிட்டுள்ளது.
அத்தோடு, விட்டுவிடாமல், கடை உரிமையாளரை, ஆயுதமுனையில் அச்சுறுத்தி, அவருடைய வீட்டுக்கும் அழைத்துச் சென்றுள்ளது. வீட்டுக்குச் சென்றதும், அங்கிருந்த பெண்கள், சிறுவர்களை அச்சுறுத்தி காதில் இருந்த தோடு உட்பட அனைத்து நகைகளையும் கொள்ளையிட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 40 பவுணுக்கு அதிக நகைகள், நான்கு இலட்சம் ரூபாய் குறித்த கும்பலால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக வீட்டார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்