அரச வேலைவாய்ப்பை பெற்றுத்தருவோம் என தமிழ் இளையோர்களிடம் தவறான பரப்புரை – மாவை குற்றச்சாட்டு

வடக்கு – கிழக்கில் வேலைவாய்ப்பு வழங்குவதாக தமிழ் இளையோர்களுக்கு தவறான தகவல்களை வழங்குகின்றனர் அரசின் ஆதாரவுக் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களில் போட்டியிடும் வேட்பாளர்கள். சிலர் இளையோரிடம் விண்ணப்பப்படிவங்களை வழங்கி விவரங்களைச் சேகரிக்கின்றனர்” என்று தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளருமான மாவை சோ. சேனாதிராசா தெரிவித்தார்.

இவ்வாறு தவறான தகவல்களை வழங்கி இளையோரின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றார்கள். அதுதொடர்பில் எமது வேட்பாளர்கள் தெளிவூட்டல்களை வழங்கி வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“வடக்கு – கிழக்கில் அரசு சார்புக் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களில் போட்டியிடுவோர் தமிழ் இளையோர்களைத் தமது பக்கம் ஈர்ப்பதற்காக, உங்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று தவறான தகவல்களை வழங்குகின்றனர். அத்தோடு சிலர் விண்ணப்பப்படிவங்களை வழங்கி தேசிய அடையாள அட்டை உள்ளிட்டவற்றின் விவரங்களைப் பெற்று வருகின்றனர்.

அது அப்படி நடக்க முடியாது. திடீரென்று ஒரு வேலைவாய்ப்பை வழங்க முடியாது. நாடாளுமன்றம் உருவாகியதன் பின்னர், அதுதொடர்பில் நாடாளுமன்றுக்கு அறிவித்ததன் பின்னரே வேலைவாய்ப்புகளைப் பெற முடியும். தேர்தல் காலத்தை ஒட்டியோ, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காகவோ வேலைவாய்ப்புக்களை வழங்க முடியாது.

இது தொடர்பில் எமது வேட்பாளர்களினாலும் பல்கலைக்கழக மாணவர்களிலும் தமிழ் இளையோர்களிடம் எடுத்துரைத்து வருகின்றோம். அதனால் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியினாலோ அல்லது அரசைச் சார்ந்த கட்சிகள், சுயேட்சைக் குழுக்களின் முயற்சிகள் அல்லது வெற்றியைப் பெற்றுவிடலாம் என்ற அவர்களது எதிர்பார்ப்பு குறைந்து வருகின்றது” என்றும் மாவை சோ. சேனாதிராசா குறிப்பிட்டார்.

Related Posts