வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவமதிக்கும் செயலைக் கண்டித்து, தந்தை செல்வா சதுக்கத்தின் முன்பாக வரணி இளைஞர் ஒருவர் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைச் சுதந்திரமாகச் செயற்பட விடுமாறு வலியுறுத்தியதுடன் 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து வரணி இளைஞர் ஒருவர் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்.
வரணிப் பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் துசாந், இலங்கைப் போக்குவரத்து சபை பேரூந்து நடந்துனராக கடமையாற்றும் இவர் இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளார்.
இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில், முதல்வர் மீது அவதூறு செய்யாதீர்கள், அரசியல் கைதிகளின் விடுதலைக்குக் கொடுத்த வாக்குறுதிகளை ஏமாற்றாதீர்கள், முதல்வரைச் சுதந்திரமாகச் செயற்பட விடுங்கள், சங்கிலியன் அரண்மனைக்குச் சுற்றுமதில்கள் அமைத்துப் பேணுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், எமது பாரம்பரியங்கள் சிதைக்கப்பட்டு வருகின்றதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களின் தேவைகளை செய்யாமல், மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் தன்னிச்சையாக செயற்படுவதாகவம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனவே, தமிழ் மக்களின் பாரம்பரியங்களையும், பாரம்பரிய சின்னங்களையும், பாதுகாப்பதுடன், வற்றாப்பளை பகுதியில், தாயை இழந்த 3 பிள்ளைகள் உணவுக்குக் கூட வழியின்றிக் கஸ்ரப்பட்டு வருகின்றார்கள்.
இவ்வாறு கஸ்ரப்பட்டு இருக்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வேண்டுகோள்விடுத்து இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்.