தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு நரேந்திர மோடி தலையிட வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவின் தலையீடின்றி இலங்கை அரசாங்கத்திடமிருந்து இலங்கைத் தமிழ் மக்கள் தீர்வொன்றை எதிர்பார்க்க முடியாதென்றும் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
இலங்கையில் ஆட்சி நடத்திய மற்றும் நடாத்தும் அரசாங்கங்களினல் தமிழர்களுக்கு 65 வருடங்களாக அநீதி இழைக்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவின் நேரடியான, உறுதியான ஈடுபாடின்றி அரசியல் தீர்வொன்றை எட்டமுடியாதென்பதை நன்குணர்ந்துள்ளனர்.
குறைந்தபட்சம் வடக்கு கிழக்கு இனைந்த விசேட பிராந்தியத்தில் உண்மையான சமஷ்டி சுயாட்சியை வழங்கும் தீர்வை பெறுவதற்கு உதவவேண்டும்.
இப் பிராந்தியத்தில் உள்ள தமிழர்களின் மருத்துவ, கல்வித் தேவைகளுக்கு உதவுமாறும் தமிழ்நாட்டிலிருந்து தமிழ் பேசும் வைத்தியர்களையும், ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களையும் இங்கு அனுப்புவதற்கு ஏற்பாடுகளை எடுக்குமாறும் கேட்டுள்ளார்.
தமிழர் அதிகம் வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து இராணுவத்தை அகற்றவும், அரசாங்கம் முன்னெடுக்கும் சிங்கள குடியோற்றங்களையும் நில பறிப்பை நிறுத்தவும் இந்தியா தலையிடவேண்டும்.
இந்திய-இலங்கை மீனவர்கள் முகம்கொடுக்கம் பிரச்சினைகளை தீர்த்து தமிழ் நாட்டுக்கும் வடக்கு கிழக்கு மாகாணசபைகளுக்கும் இடையில் நெருங்கிய பொருளாதார ஒன்றிணைப்பை உருவாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.