காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் உயிரிழந்தவருக்கு கோரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
அதனால் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
காரைநகரில் கோரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரது வீட்டுக்கு அண்மையில் வசித்த வந்த அருளையா ஜனகராசா (வயது- 60) என்ற வயோதிபரே உயிரிழந்தார்.
மூச்சுத் திணறல் காரணமாக அவர் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவரை கோவிட் -19 நோய்த் தொற்று தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டது.
எனினும் அவர் உயிரிழந்துள்ளார். மருத்துவர்களின் குறிப்பேட்டின் படி குருதியின் அளவு 20 சதவீதமாகக் குறைந்ததால் அவர் உயிரிழந்துள்ளார் என்றுள்ளது.
இந்த நிலையில் அவரது மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கோரோனா வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.