டுபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 63 அடுக்கு மாடி நட்சத்திர ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
புத்தாண்டு பிறப்புக் கொண்டாட்டத்தை ஒட்டி வாணவேடிக்கை நடக்க இருந்த இடத்துக்கு அருகிலேயே இந்தக் கட்டடம் உள்ளது.
அட்ரஸ் டவுன்டவுன் ஹோட்டல் என்ற இந்த 63 -மாடிக் கட்டடம், உலகின் உயரமான கட்டடமான பர்ஜ் கலீஃபாவுக்கு அருகே உள்ளது.
இதனையடுத்து தீயை அணைக்கும் முயற்சியில் டுபாய் பாதுகாப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
20-வது மாடியின் வெளிப்புறத்தில் முதலில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் மேலிருந்து கீழ் வரை தீ மளமளவென பரவியது. இதனால் அந்த பகுதியே புகை மூட்டம் போல் காட்சி அளித்தது.
1000 அடி உயரமான இந்தக் கட்டடத்திலிருந்து எரிந்த துண்டுகள் விழுந்துகொண்டிருப்பதை பலரும் அவதானித்துள்ளனர்.
விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று டுபாய் பாதுகாப்பு துறை தலைவர் மேஜர் ஜெனரல் ரஷெத் அல்-மத்ருஷி தெரிவித்தார்.
இருப்பினும் இந்த தீ விபத்து புத்தாண்டு கொண்டாட்டங்களை பாதிக்கவில்லை என்று அவர் கூறினார்.
ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு துபாயில் 830 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள 160 அடுக்குமாடி கட்டிடத்தில் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு புத்தாண்டிற்கு முன்பாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.