கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைவதைக் கட்டுப்படுத்தி நாட்டு மக்களை பாதுகாப்பதற்கான சவாலை வெற்றி கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
வைரஸ் பரவலோடு உலகில் பெரும்பாலான நாடுகளுக்கு முன்னர் அதனை ஒழிப்பதற்கு பொறுப்புடைய அரசாங்கம் என்ற வகையில் வெற்றிகரமாக நடவடிக்கை எடுத்தபோது வெவ்வேறு சவால்கள் எழுந்தபோதும் சிறந்த திட்டங்களுடன் அவை ஒவ்வொன்றையும் வெற்றி கொள்ள முடிந்தது என கூறினார்.
கொரோனா வைரஸை ஒழிப்பிற்காக விஷேட ஜனாதிபதி செயலணியுடன் நேற்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்காலத்திலும் இவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்தாலும் அவற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை கைவிடப் போவதில்லை என்றும் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய சவால்களுக்கும் முகங்கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு பி.சி.ஆர். பரிசோதனைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு சமூகத்தில் பரவல் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.