யாழ்ப்பாணத்தில் கொடையாளர்களால் வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகளை அரசியல்வாதி ஒருவருக்கு வழங்குமாறு பணித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் பதிலளித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டம் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தின்போது தற்போதைய நிலைமைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் சகல துறைசார் விடயங்கள் குறித்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இதேவேளை, கொடையாளர்களால் வழங்கப்பட்ட உணவுப் பொதியை அரசாங்க அதிபர், அரசியல்வாதி ஒருவருக்கு வழங்குமாறு பணித்ததாக தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு ஆதாரம் நிரூபிக்கப்பட்டால் உரிய விசாரணை நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, வெளிமாவட்டங்களில் இருந்து யாழ். மாவட்டத்தில் தங்கியுள்ளவர்கள் ஊரடங்கு அமுலில் உள்ள நான்கு மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு உரிய முறையில் அனுமதிகளைப்பெற்று வெளி மாவட்டங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.