ஏழாலை பகுதியில் 20 லீற்றர் கசிப்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வியாழக்கிழமை (26) கைதுசெய்யப்பட்ட 40 வயதான ஒருவரை நீதிமன்ற உத்தரவுக்கமைய, 200 மணித்தியாலங்கள் சமூக சேவையில் திங்கட்கிழமையிலிருந்து (30) ஈடுபடுத்தி வருவதாக சுன்னாகம் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை (01) தெரிவித்தனர்.
இந்தச் சந்தேக நபரை மல்லாகம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (27) ஆஜர்படுத்தியபோது, மேலதிக நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா 25 நாட்களில் 200 மணித்தியாலங்கள் சமூக சேவையில் இவர் ஈடுபடவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
கசிப்பு உற்பத்தி செய்பவர்கள் மற்றும் வைத்திருப்பவர்களுக்கு சமூக சேவையில் ஈடுபடுவதற்கு யாழ்ப்பாண நீதிமன்றங்கள் அண்மைக்காலமாக உத்தரவிட்டு வருகின்றன.
அண்மையில் யாழ். சாவகச்சேரி, கெருடாவில் பகுதியில் கசிப்புடன் கைதுசெய்யப்பட்ட பெண் ஒருவரை 180 மணித்தியாலங்கள் சமூக சேவையில் ஈடுபடுமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.