அவுஸ்திரேலிய விக்டோரியா மாநிலத்தில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் நூற்றுக்கும் அதிகமான வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.
இதில் பிரபல சுற்றுலா நகரங்களான வைரிவர் மற்றும் செபரேஷன் கிரீக் ஆகிய இரண்டு நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயணிக்கும் கிறேட் ஓசோன் என்ற வீதியும் இந்த காட்டுத்தீயால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் காட்டுத்தீயினால் சுமார் 2200 கெக்டேயர்ஸ் அளவில் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வேகமாக பரவிய காட்டுத்தீயின் தீவிரம் காரணமாக இந்தப் பகுதிகளில் வசித்த பலரும் அங்கே சென்றிருந்த சுற்றுலாப்பயணிகளும் தமது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை பாதியிலேயே நிறுத்திவிட்டு அவசர அவசரமாக அங்கிருந்து தப்பி வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர்.
அங்கே பெய்த மழை இந்த காடுத்தீயின் தீவிரத்தை ஓரளவு தணிக்க உதவியிருந்தாலும் அதனால் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை. கடந்த வாரத்தில் துவங்கிய இந்த காட்டுத் தீ கடந்த இரண்டு நாட்களாக அங்கே நிலவிய வெயிலின் உக்கிரத்தாலும் வீசிய பெருங்காற்றாலும் மேலும் தீவிரமடைந்தாக தெரிவிக்கப்படுகிறது.