இரவுநேர பயணங்களின்போது சாரதியை மட்டும் முழுமையாக நம்பியிராமல் பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர வலியுறுத்தியுள்ளார்.
மஹியங்கனையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் மூன்று குழந்தைகள், மூன்று பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் நாட்டில் சமீப காலமாக இடம்பெறும் விபத்துக்கள் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பயணிகளை கவனமாக கொண்டுச்சேர்க்க வேண்டியது சாரதியின் பொறுப்பு என்றபோதும் இரவுப் பயணங்களில் அவருக்கு நித்திரை ஏற்படாமல் அவருடன் உரையாடியவண்ணம் வரவேண்டியதை பயணிகள் வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சாரதிக்கு நித்திரை ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பயணிகள் இடையிடையே வாகனத்தை நிறுத்தி அவருக்கு தண்ணீர் அல்லது தேநீரை பருகக்கொடுக்க வேண்டுமென்றும் அல்லது அவரது முகத்தை கழுவுமாறு கூறவேண்மென்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோன்று நித்திரை வருமாயின் வாகனத்தை நிறுத்தி ஓய்வெடுத்துச்செல்ல வேண்டியது சாரதிகளின் பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்காமையே நேற்று மஹியங்கனையில் இடம்பெற்ற விபத்துக்கான காரணமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.