தென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து டிசம்பர் 15ஆம் திகதி வடக்கு-வடமேற்கு திசையில் தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இத் தொகுதியின் தாக்கம் காரணமாக ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில்இ மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் குறித்த காலப்பகுதியில் பலத்த மழைவீழ்ச்சி மற்றும் (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை) அதிகரித்த வேகத்முடனான காற்றுடன் கூடிய திடீரென்ற கடல் கொந்தளிப்பு போன்றவற்றுக்கு சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.
மீனவர்கள் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் டிசம்பர் 15ஆம் திகதி வரை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணித்தியாலத்திற்கு
ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போதுமழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கொழும்பிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்ற வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
நாட்டுக்கு கிழக்காக உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும்காணப்படுவதுடன் நாட்டுக்கு மேற்காக உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் அக் கடற்பிரதேசங்கள் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்காணப்படும் வானிலை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.