ஆங்கிலப் பத்திரிகையொன்றில்நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியாகியிருந்த, “போக்குவரத்து வசதி இல்லாமையினால் நாள்தோறும் 24 கி.மீ. தூரம் நடந்து பாடசாலைக்கு செல்லும் முல்லைத்தீவு மாந்தை கிழக்கு அம்பாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள்” எனும் செய்தி தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் ஈர்க்கப்பட்டது.
இதனால் அவருடைய ஆலோசனையின் பேரில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ் பிரிவினது தலையீட்டின் காரணமாக அந்த மாணவர்களினதும் பொதுமக்களினதும் பிரயாண வசதிக்காக பேரூந்து சேவையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பேரூந்துச் சேவை எதிர்வரும் புதன்கிழமையிலிருந்து பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. இதனை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென முல்லைத்தீவில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பொறுப்பதிகாரி குணசீலன் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் தமிழ் பிரிவிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தப் போக்குவரத்து பிரச்சினை தொடர்பில் அரச அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் 2010ஆம் ஆண்டிலிருந்து முறையிட்ட போதிலும் எந்தவொரு சாத்தியமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.