யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு காப்புறுதி நிறுவனங்கள் உரிய நட்டஈட்டை செலுத்த வில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரதமருடனான நேரடி கேள்வி பதில் நேரத்தின்போது அவர் இவ்வாறு குற்றம் சுமத்தினார்.
தொடந்து உரையாற்றிய அவர் ‘வடக்கு,கிழக்கு மாகாணங்களில் 2008,2009 இறுதி யுத்தத்தின்போது கைத்தொழில்கள், கடைகள் உட்பட அதிகமான வர்த்தக நிலையங்கள் அழிக்கப்பட்டன.
அவ்வாறு அழிக்கப்பட்ட கைத்தொழில், கடைகள் உட்பட வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு எவ்வித நட்ட ஈடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 2009 இற்கு முன்னதாக இருந்த வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை காப்புறுதி செய்திருந்தனர்.
கோடிக்கணக்கில் கட்டணமும் செலுத்தப்பட்டுள்ளது. எனினும், சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனங்கள் இதுவரை அந்த தொகையை வழங்காமல் ஏமாற்றி வருகின்றன’ என்று சிறிதரன் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் , குறித்த காப்புறுதி நிறுவனங்களின் விபரங்களை வழங்கினால் இந்த விடயம் தொடர்பாக கலந்தாலோசித்து தீர்வை பெற்றுத்தருதாக உறுதியளித்தார்.