நல்லூர் துப்பாக்கிச் சூடு: டெஸ்டர் கொடுத்த மனைவிக்குச் சிக்கல்

நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு, அவரது மனைவி டெஸ்டர் (மின்சாரம் பரிசோதிக்கும் கருவி) ஒன்றை, பொதிக்குள் வைத்துக் கொடுக்க முயன்ற வேளை, சிறைச்சாலைக் காவலர்களால் அது கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ். சிறைச்சாலையில், தனிச் சிறைக்கூடத்திலேயே சந்தேகநபர், தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சந்தேகநபரின் மனைவி, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவருக்கு உடைகளை வழங்கப் பொதி செய்து, சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் கையளித்துள்ளார்.

அந்தப் பொதியை, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சோதனையிட்ட போது, அதனுள் இருந்து டெஸ்டர் ஒன்று மீட்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மனைவியைக் கடுமையாக எச்சரித்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், கணவனைப் பார்க்கச் சிறைக்கு வருவதற்கும், மனைவிக்குத் தடை விதித்துள்ளனர்.

நல்லூர் பின் வீதியில், கடந்த 22ஆம் திகதி மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியின் மெய்ப் பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொரு மெய்ப் பாதுகாவலர், காயமடைந்திருந்தார்.

அந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான சிவராசா ஜெயந்தன், கடந்த 25ஆம் திகதி, யாழ். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

அதையடுத்து, குறித்த நபரை யாழ். நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, சந்தேகநபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts