எமது மண்ணில் இருந்து எம்மைத் துரத்தலாம் என நினைத்து, இளைஞர்களின் மனநிலையினை மீண்டும் வேறு திசைகளுக்கு மாற்றாதீர்கள் என வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
முள்ளியவளையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது இளைஞர்கள் இன்று ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். எமது இளைஞர்களின் பலத்தினை தெரிந்தவர்கள் இன்று அரசாங்கத்தில் இனவாதிகளாக இருக்கின்றார்கள்.
முல்லைத்தீவில் சாதித்த எமது இளைஞர்களை எல்லா நாடுகளும் சேர்ந்து மௌனிக்கச் செய்தீர்கள். இளைஞர்களின் சக்தியை யாரும் சாதாரணமாக நினைக்க வேண்டாம்.
எமது இயற்கையை அழித்து அன்னியக் குடியேற்றங்களை ஏற்படுத்தி எங்களைத் துரத்தலாம் என நினைத்தால் அது வெறும் பகல் கனவு. அவ்வாறனதொரு நிலை ஏற்பட்டால் எமது இளைஞர் சக்தி மேலும் விஸ்வரூபம் எடுக்கும்” என வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
http://www.e-jaffna.com/archives/84431