கிளிநொச்சி கண்டாவளை வெளிக்கண்டல் பாலத்திற்கு அருகில் இரண்டு கனரக வாகனங்கள் நேருக்குநேர் மோதி ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த இருவர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று இரவு பதினொன்று முப்பது மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு பக்கமாக சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனமும், முல்லைத்தீவிலிருந்து பரந்தன் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த லொறியும் வெளிக்கண்டல் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
டிப்பர் வாகனத்தின் சாரதி உதவியாளரும் லொறியின் சாரதியுமே காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் குறித்த வாகனங்கள் இரண்டும் கடுமையாக சேதமடைந்துள்ளமையால் வீதியில் இருந்து அகற்றப்படாமையால் இன்று அதிகாலை இரண்டு மணிவரை ஏ 32 முல்லை வீதியின் போக்குவரத்து தடைப்படுள்ளது.
இவ்வாகனங்களை அகற்றுவதற்கு பாரம்தூக்கி அல்லது யே .சி .பி ரக வாகனம் தேவைப்படுவதால் சில வேளைகளில் இன்று காலையும் ஏ 32 முல்லை வீதியின் போக்குவரத்து தடைப்படலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.