பொலிஸ்நிலையம் பொது மக்களால் முற்றுகை : முழங்காவில் பெரும் பதற்றம்

சுமார் முந்நூறுக்கும் மேற்ப்பட்ட கிராமமக்கள், மதத் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புகள் நாச்சிக்குடா சந்தியில் இருந்து முழங்காவில் பொலிஸ் நிலையம் வரை பேரணியாகச் சென்று பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 17 ம் திகதி இரவு முழங்காவில் கரியாலை நாகபடுவான் தேவாலய திருவிழாவை முடித்துக் கொண்டு வீதிக்கு வந்த பதின்மூன்று வயதான அ.அபினேஸ் என்ற சிறுவனை மன்னார் பகுதியில் இருந்து வந்த கார் மோதிவிட்டு விபத்தையடுத்து கார் தப்பியோட்டிருந்தது குறித்த விபத்தில் காயமடைந்த சிறுவன் கோமா நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நான்குமணிளவில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துத் தொடர்பில் முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால் முறைப்பாட்டு செய்யப்பட்டிருந்ததுடன் தப்பி ஓடிய காரின் ஒரு இலக்கத்தகடு வீழ்ந்த நிலையில் அதன் இலக்கமும் பொலிஸாரிற்கு வழங்கப்பட்டிருந்தது எனினும் பொலிசாரால் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறி முந்நூறுக்கும் மேற்ப்பட்ட கிராமமக்கள், மதத் தலைவர்கள் மற்றும் பொது அமைப்புகள் நாச்சிக்குடா சந்தியில் இருந்து முழங்காவில் பொலிஸ் நிலையம் வரை பேரணியாகச் சென்று பொலிஸ் நிலையத்தை முற்றுகை இட்டனர்.

அதனை அடுத்து அங்கு வருகைதந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்தேக நபரை கைதுசெய்யும் வேலைத்திட்டம் நடைபெற்றுக் கொண்டுள்ளதாகவும் இன்று சந்தேகநபர் கட்டாயம் கைது செய்யப்பட உள்ளார். நாளை எமது பொலிஸ் நிலைய கூட்டினுள் அவரைக் காணமுடியும் என அவரால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக தற்போது முற்றுகை கைவிடப்பட்டுள்ளது.

Related Posts