இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட ஐந்து பேரின்ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை மார்ச் மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்கொண்ர்வு மனு தொடர்பிலான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எஸ்.எம்.எஸ் சம்சுதீன் முன்னிலையில் இன்றையதினம் வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர் பட்டியல் இல்லை என ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சானக்க குணவர்த்தன இன்றைய தினமும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல் தம்மிடம் இருப்பதாகவும் அந்த ஆவணத்தை நீதிமன்றில் சமர்ப்பிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
எனினும் இந்த வழக்கு தொடர்பிலான விசாரணை கடந்த ஜுலை மாதம் 14 ஆம் திகதி நடைபெற்ற நிலையில், இறுதி யுத்தத்தில் 58 ஆவது படைப்பிரிவிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள், புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு மேஜர் ஜெனரல் சானக்க குணவர்த்தனவால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தை ஏற்றுக்கொள்ள முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் மறுத்திருந்தது.
இதேவேளை குறித்த அறிக்கையானது முழுமையற்ற ஒரு ஆவணமாக காணப்படுவதாக அறிவித்துள்ள நீதிபதி, அனைத்து விபரங்களும் அடங்கிய முழுமையான ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின் போது மனுதரர் தரப்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் ஊடகங்களுக்கு வழக்கு தொடர்பான விபரங்களை வெளியிடுவது குறித்து இராணுவ தரப்பில் முன்னிலையான சட்டத்தரணியால் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்றைய வழக்கு விசாரணைகள் குறித்து ஊடகங்களுக்கு தகவல்களை வழங்குவதற்கு மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் மறுத்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இருதரப்பின் வாத பிரதிவாதங்களை ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.எஸ் சம்சுதீன், இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் சார்பில் அவரது மனைவியான வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், கிருஷ்ணகுமார் ஜெயகுமாரி, விஸ்வநாதன் பாலநந்தினி, கந்தசாமி காந்தி, கந்தசாமி பொன்னம்மா உள்ளிட்ட ஐந்துபேரின் இந்த ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.