பஸ் சேதம்: 12 பேருக்கு சிறை

காரைநகர் போக்குவரத்து சாலைக்குச் சொந்தமான பஸ்ஸை மறித்து தாக்குதல் மேற்கொண்ட 12 பேருக்கு, தலா 4,000 ரூபாய் வீதம் 48 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், 12 பேருக்கும் 1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட 5 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், பஸ் மீது தாக்குதல் மேற்கொண்டு சேதம் எற்படுத்தியமைக்காக, போக்குவரத்து சாலைக்கு 5,350 ரூபாயையும் நடத்துனரிடமிருந்து அபகரித்த பயணசீட்டு பணமான 25,076 ரூபாய் பணத்தினை மீளச் செலுத்துமாறும், வழக்கை கொண்டு நடத்திய காரைநகர் சாலைக்கு, தலா 5,000 ரூபாய் வீதம் 12 பேரும் 60 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும் என்று, செவ்வாய்க்கிழமை நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி, போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டிருந்த, காரைநகர் சாலைக்குரிய பஸ்ஸை, யாழ்ப்பாணம் கச்சேரி பகுதியில் இடைமறித்த, பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள், சகபயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பஸ்ஸை அடித்து சேதப்படுத்தியிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பில், பஸ் நடத்துனர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய, 12 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனுடன் தொடர்புடைய வழக்கு விசாரணை, கடந்த மூன்று மாதங்களாக, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி சின்னத்துரை சதீஸ்தரன் முன்னிலையில் நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts