வட மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையில் நடைபெறுகின்ற குழுக்கூட்டத்தில் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் 4 அமைச்சர்களும் கலந்துகொள்வதில்லை. இனிவரும் கூட்டங்களில் அவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.
வடமாகாண சபை அமர்வுக்கு முன்னதாக நடைபெறும் குழுக்கூட்டம் வடமாகாண சபையில் திங்கட்கிழமை (11) முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அவைத்தலைவர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ளவில்லை.
‘அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமையால், பிரச்சினைகளை யாரிடம் வெளியிடுவது. கூற வேண்டிய விடயங்களையும் கூற முடியாமல் இருக்கின்றது’ என உறுப்பினர்கள் கூறினர்.
மேலும், மாகாண சபை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நடைபெறும் கூட்டங்களும் தற்போது வருடத்துக்கு ஒருமுறை தான் நடைபெறுகின்றது எனவும் அதனையும் அடிக்கடி நடத்த வேண்டும் எனவும் உறுப்பினர்கள் கூறினர்.